
நாடாளுமன்ற தொகுதி வாரியாக “நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி” சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை முதல் வருகிற பிப்ரவரி 05ம் தேதி வரை நடைபெறும் திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்
குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட “நிர்வாகிகள் சந்திப்பு” நிகழ்ச்சி நாளை முதல் பிப்ரவரி 05ம் தேதி வரை சென்னை, அண்ணா சாலை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.