ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தப்படி அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


ஆனால் அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இடைத்தேர்தலில் த.மா.க போட்டியிட விருப்பம் இல்லை என அக்கட்சியின் தலைவர் ஜி. கே.வாசன் அதிமுக நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு அதிமுக சார்பில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக-வானது ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என இரு பிரிவுகளாக பிரிந்து உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என இரண்டு அணிகளும் இணைந்து வந்தால் மட்டுமே இரட்டை இலை சின்னம் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையமும் உறுதியாக கூறிவிட்டது.

எனவே, ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்கள் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.
இந்த நிலையில் தான் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முகாமிட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி , தங்கமணி ,
சிவி.சண்முகம் , திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, கே.சி.கருப்பண்ணன் ஆகிய ஆறு பேருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
சுமார் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.

இதில் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக சுயேட்சையாக நிற்க முடிவு செய்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இடைத் தேர்தலில் சுயேட்சையாக அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர் பெறுகின்ற வாக்குகள் மூலம் தன்னுடைய பலம் என்ன என்பதை நிரூபிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தான் தனது ஆதரவாளருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன்,
கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் புறப்பட்டனர்.
