ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலை நாடுகளை போல் ”அதிபர் ஆட்சி”யை கொண்டுவருவதற்கான முதல் படியாகவே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திருத்த மசோதா உள்ளதாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி டெல்லியில் தெரிவித்துள்ளார்!
நாடாளுமன்ற மக்களவையில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நாடாளுமன்ற நிலை குழுவுக்கு இன்று அனுப்பப்பட்டது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக நாளாளுமன்ற குழு தலைவர் சேர்ந்த கனிமொழி, எதிர்க்கட்சிகள் அனைவராலும் எதிர்க்கப்பட்ட மசோதாவை பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்று அறிமுகம் செய்துள்ளதாகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சட்ட திருத்த மசோதா மாநில அரசின் உரிமையை பறிப்பதாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைக்க கூடிய அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கக்கூடிய மசோதாவாக சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மாநில கட்சிகள் சிறிது சிறிதாக வலுவிலக்கக்கூடிய வகையிலே மத்திய அரசின் சட்ட திருத்த மசோதா உள்ளது எனவும், மேலை நாடுகளில் உள்ளது போல “அதிபர் ஆட்சியை” கொண்டு வருவதற்கான தொடக்கமாகவே மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவை புரிந்து கொள்ள முடிவதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
பல மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தவே இயலாத சூழலில் ஒரே நேரத்தில் எப்படி நாடு முழுவதும் தேர்தலை நடத்த முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். ஒரு வேளை தேர்தலை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடத்தி திட்டமிட்டால் கூட அதற்கான கட்டமைப்புகள் நம்மிடம் உள்ளதா? எனவும், போதுமான பணியாளர்களோ? அல்லது தேர்தலுக்கு தேவையான உபகரணங்களோ உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
3ல் இரண்டு பங்கு பெரும்பான்மை கூட இல்லாத நிலையில் வேறு சில பிரச்சனைகளை திசை திருப்பவே சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் அடிப்படையவே திமுக எதிர்ப்பதாகவும் டெல்லியில் அக்கட்சியின் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.