ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.
1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை வைத்து சோதனை செய்தார். இது அவருக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சி தான் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பேசுவதற்கு அடித்தளமாக அமைந்தது.
அந்த காலகட்டத்தில் ரஜினியின் தளபதி படம் வெளியானது. அந்த போஸ்டரில் வருங்கால தமிழகத்தின் முதல்வர் என்று அச்சிடப்பட்டு அவருடைய ரசிகர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டினார்கள். அந்த போஸ்டரை ஒட்டக்கூடாது என்று ரஜினி ரசிகர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
அதன் பிறகு வந்த அனைத்து திரைப்படங்களிலும் அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களை பேசி ரசிகர்களை ரஜினி என்ற மாய வளைக்குள் கொண்டு வந்தார். அவர் பேசிய வசனங்கள் வாயிலாக அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையும் தன் ரசிகர்களுக்கு அரசியல் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் மறைமுகமாக கொடுத்து வந்தார்.
1995ஆம் ஆண்டு வெளிவந்த முத்து படத்தில் ஒரு காட்சியில் “நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரக்டா வருவேன்” என்று சொல்லி இருந்தார்.

அப்பொழுதில் இருந்து ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார் என்று ஒரு பெரிய எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் உருவானது. 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் ரஜினி நேரடியாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுது அவர் நேரடியாக வராமல் மறைமுகமாக அரசியலுக்கு வந்தார்.
1996-ல் திமுகவும் தமிழ் மாநில காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் திமுக எப்படியும் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற நிலையும், வாழ்வா சாவா என்ற நெருக்கடியும் இருந்தது. அந்த நேரத்தில் ரஜினியின் ஆதரவு திமுகவுற்கு பெரும் சக்தியாக உதவியது.
ரஜினிகாந்த் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, மீண்டும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று அதிரடியாக பேசி ஒரு பெரிய அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தினார். திமுக கூட்டணிக்கு ஆதரவாக அந்த குரல் மாறியது. அவர் தொலைகாட்சியில் செய்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது திரும்பும் திசை எல்லாம் ரஜினியின் பேச்சாகவே இருந்தது.
மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு வைத்த வில்லுப்போட்டியை தேர்தலுக்கு உவமையாக்கி கலைஞர் தான் முதலமைச்சர் என்றும், அவரை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பேன் என்று சொல்லி அதை செய்தும் காட்டினார் ரஜினி.
அந்த தேர்தலில் திமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா தோற்றுப் போனார். அதுவும் படுதோல்வி அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இது இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்திலே வேறு எந்த ஒரு நடிகனுக்கும் கிடைக்காத மிகப்பெரிய தகுதி ரஜினிக்கு கிடைத்தாக கருதப்பட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவ்வாண்டின் சிறந்த கதாநாயகன் மற்றும் பத்மபூஷன் விருதுகளை தந்து கலைஞர் ரஜினியை கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வந்தது. அந்த தேர்தலிலும் ரஜினி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதனால் அந்த கூட்டணி மீண்டும் மாபெரும் வெற்றியை பெற்றது.
2002 ஆம் ஆண்டு காவிரி நீர் பிரச்சனை ஏற்பட்டது. அப்பொழுது இப்பிரச்சனைக்கு தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் தான் ஒரே தீர்வாக அமையும் என்றார். மேலும் அத்திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதியும் அளித்தார்.
அதே 2002 ஆம் ஆண்டு ரஜினியின் பாபா படம் வெளிவந்தது. படத்தில் சில காட்சிகளை வெட்ட வேண்டும் என்று சொல்லி பாமக போர் கொடி தூக்கியது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் பாமகவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று குரல் கொடுத்தார் ரஜினி. ஆனால் அந்தத் தேர்தலில் இவரின் பேச்சு எடுபடாமல் பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. அப்போது தான் முதன்முறையாக ரஜினியின் செல்வாக்கு சரிய தொடங்கியது.
அந்த காலக்கட்டத்தில் ரஜினி இனிமேல் அவ்வளவுதான், அவர் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றெல்லாம் பேசப்பட்டது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் படத்தின் வேலைகளில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற திரைப்பட விழாவில் ஜெயலலிதாவிற்கு தைரிய லட்சுமி என்ற பட்டத்தை தந்தார்.
2009 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தன் பிறந்த நாளில் ரசிகர்களை சந்தித்து நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி ஆசை வார்த்தை கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ரசிகர்கள் அவருக்காக நிறைய கோவில்களில் பிரார்த்தனைகள் செய்தனர். அவர் குணமடைந்து ரசிகர்களை மீண்டும் அழைத்து அவர்களுக்கு நன்றி கூறினார். எனக்காக இவ்வளவு செய்த உங்களுக்கு நான் நிச்சயம் நல்லது செய்வேன் என்று சொல்லி மீண்டும் அரசியல் ஆசைகளை தூண்டினார்.
2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது பாஜகவின் சார்பாக பிரதமர் மோடி ரஜினிகாந்தை வீட்டிற்கே வந்து சந்தித்து பேசினார். ரஜினி தரப்பில் இது வெறும் மரியாதை நிமித்தம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அரசியல் தரப்பில் அவர் பாஜகவில் சேர்ந்து விட்டதாகவே பேசப்பட்டது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ரசிகர்களை சந்தித்து டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் பற்றி அறிவிப்பேன் என்றார். அதேபோல் டிசம்பர் 31 ஆம் தேதி மாவட்ட வாரியாக ரசிகர்களை அழைத்து அவர்கள் மத்தியில் நான் அரசியலுக்கு வர போகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். சட்டமன்றத் தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் சொன்னார். அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழருவி மணியன் உள்ளிட்ட ஏராலமான பாஜக ஆதரவாளர்கள் ரஜினியை சந்திப்பதும், பேட்டி கொடுப்பதும் அரசியல் களம் பரபரப்பாக இயங்கியது.
அந்த நேரத்தில் ரஜினியின் நண்பரான கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி இருந்தார். அதனால் கமலஹாசனுடன் கூட்டணி வைப்பாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்று பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்த காலகட்டத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. அண்ணாத்த படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மீண்டும் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவரின் அறிவுறுத்தல் படி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
குணமடைந்த பிறகு தன் ரசிகர்களை அழைத்து என்னை நம்பி வருபவர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும் என் உடல்நிலை அரசியலுக்கு ஒத்து வராது ஆகவே நான் அரசியலுக்கு வருவதை தற்காலிகமாக தள்ளிப் போடுகிறேன் என்று அறிவித்தார். இதை அறிவிக்கும் பொழுது எனக்கு எவ்வளவு வலி ஏற்பட்டது என்று எனக்குத் தான் தெரியும் என்று சொல்லி தன் அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மீண்டும் அவரின் அரசியல் பிரவேசம் தொடங்குமா அல்லது அவருடைய ரசிகர்களை வழக்கம் போல் ஏமாற்றி விட்டாரா என்பதை அவர் பாணியில் சொன்னால் “கடவுளுக்கு தான் தெரியும்”.
– கட்டுரை : டில்லி பாபு