விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது, தம் இருக்கும் வரை தான் ஊத முடியும், ஒரு மனிதன் எவ்வளவு நேரம் விசில் ஊதுவான்? சும்மா கொஞ்ச நேரம் தான் ஊதுவான், அதற்கு மேல் ஊதினால் மேலே சென்று விடுவான் என தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு ஆர் எஸ் பாரதி பதில் அளித்துள்ளாா்.
திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திமுக சட்டத்துறை தலைவர் விடுதலை மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ ஆகியோர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சட்டத்துறை நிர்வாகிகள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும், 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு திமுக சட்டத்துறை நிர்வாகிகள் சட்ட ரீதியாக எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, ”எதிர்க்கட்சிகளுக்கு ஏற்கனவே தோல்வி பயம் வந்துவிட்டது மகளிர் உரிமைத்தொகை என்பது நேற்று மட்டுமா வழங்கப்பட்டது மாத மாதம் வழங்கப்படுகிறது.
எடப்பாடியும் நயினார் நாகேந்திரனும் மோடியின் துணையோடு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை நிறுத்த முயற்சி செய்தனர். இதையெல்லாம் தெரிந்ததால் முதலமைச்சர் நேற்றே 5000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை வழங்கினார்.
நாளையிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் ஆட்சியில் பங்கு என்பதை பேச மாட்டார்கள், நேற்றைய அறிவிப்பில் இருந்து மக்களின் ஆதரவு திமுகவிற்கு அதிகம் இருப்பதை உணர்ந்து நாளையிலிருந்து யாரும் ஆட்சியில் பங்கு என்பதை பேச மாட்டார்கள். திட்டவட்டமாக தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது, இதனை ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாக சொல்லிவிட்டார், காங்கிரஸ் கட்சியிலிருந்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,செல்வப் பெருந்தகை இவர்களின் கேள்விக்கு பதில் சொல்லலாம், எல்லாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது.
விஜயை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் நாங்கள் மக்களோடு இருக்கிறோம், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வோமே தவிர மற்றவர்களுக்கு இல்லை. வரும் எட்டாம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பதை தலைவர் முடிவு செய்வார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் கழகப் பணிகளை மேற்கொள்ள சட்டத்துறைக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளோம். நாங்கள் அம்பேத்கரை மதிப்பது போல வேறு எந்த கட்சியினரும் அம்பேத்கரை மதிப்பதில்லை எங்களின் வழிகாட்டி என்று கூறினாா்.
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன் நிதிஷ்குமார் 10,000 வழங்கியது போல முதலமைச்சர் ஐந்தாயிரம் வழங்கி இருப்பதாக எதிர் கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆர் எஸ் பாரதி, பீகார் தேர்தலில் மக்களுக்கு பணம் விநியோகம் செய்ய மோடி பீகார் அரசிற்கு பணம் வழங்கினார், ஆனால் எங்களுக்கு அதுபோன்ற எதுவும் இல்லை என தெரிவித்தார்.
அனைவரிடமும் பணத்தை பெற்று கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்ற விஜய் கருத்து குறித்து பேசிய ஆர் எஸ் பாரதி, விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது தம் இருக்கும் வரை தான் ஊத முடியும், ஒரு மனிதன் எவ்வளவு நேரம் விசில் ஊதுவான்? சும்மா கொஞ்ச நேரம் தான் ஊதுவான். அதற்கு மேல் ஊதினால் மேலே சென்று விடுவான் எனவும் தெரிவித்தார்.
ஈசிஆர் விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர் – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!


