சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணிக்கு வருமாறு இன்பதுரை விடுத்த அழைப்பிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இன்பதுரை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிமுக நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ-மான இன்பதுரை, திருமாவளவன் எங்கு செல்வார் என தமிழ்நாடே காத்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார் என்றும், நல்லவர்களோடு தான் அவர் இருப்பார் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு சூசகமாக அழைப்பு விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய திருமாவளவன், மக்களோடு தான் எப்போதும் விசிக இருக்கும் என்றும் இது தான் இன்பத்துரைக்கான பதில் என்றும், மக்களுக்காக போராடுபவர்களுடன் விசிக இருக்கும் என்றும் கூறினார். மேலும் தேர்தல் அரசியல் என்றால் கட்சி நலன், காலச்சூழலை கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.