வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், அதில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புகைப்படமும், மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்றும் இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தெரிவித்திருந்தனர். அரசின் திட்டத்தை ஒரு தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது என்றும், இந்த திட்டம் முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. அரசு பணத்தை அரசியல் காரணங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். எனவே, உங்களுடன் ஸ்டாலின் விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸ்வா மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாரயண், முதல்வரின் முகவரி துறை சார்பில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது என்றும் ஏற்கனவே இந்த திட்டம் முதலமைச்சர் என்ற பெயரில் இருந்ததாகவும் வாதிட்டார். அரசின் விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர் சின்னங்கள் இடம்பெறக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த திட்ட விளம்பரத்தில் முதல்வரின் பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அரசுப்பணத்தில் செய்யப்படும் திட்ட விளம்பரத்தில் முதல்வரின் பெயர் ஸ்டாலின் என்பதை பயன்படுத்தக்கூடாது என வாதிட்டார். அதேபோல ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்பட உள்ள மருத்துவ திட்டத்திற்கும் ஸ்டாலின் பெயர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசுத் திட்ட விளம்பரங்களை முதலமைச்சர் படம் மட்டுமல்ல, துறை அமைச்சர்களின் படங்களை பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள தலைவர்களின் படங்கள் மற்றும் கட்சியின் சின்னம் கொண்ட விளம்பரம், அரசு விளம்பரம் அல்ல என்று குறிப்பிட்டார். அரசு விளம்பரத்தில் செய்தி விளம்பர துறையின் சீரியல் எண் இருக்கும் என்று நீதிபதிகள் முன்பு சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அரசு விளம்பரங்களின் நடைமுறை பின்பற்றப்படும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முதலமைச்சர்
பெயர் இடம் பெறலாம் என்று என்று என தெரிவித்தார்.
திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பொய் வழக்கை தொடர்ந்துள்ளார்கள், அரசியல் உள்நோக்கத்திடன் வழக்கு தொடர்ந்துள்ளார்கள், ஏற்கனவே கடந்த ஆட்சியில் அம்மா கேன்டீன், அம்மா திட்டம் என தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். மத்திய அரசு பிரதமர் மோடியின் பெயரில் நமோ என்ற திட்டத்தை தொடங்கியதையும் சுட்டிக் காட்டினார். அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் திட்டம் துவங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு குறித்து தமிழக அரசு, தேர்தல் ஆணையம், திமுக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளனர். அதேசமயம் ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டம் துவங்க தடை விதிக்க முடியாது எனவும் மறுத்து விட்டனர்.