கோடியக்கரை அருகே மீன்பிடித்த நாகை மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கி, ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, தனது மகன் மணிகண்ட பிரபு, கங்காதரன் உள்ளிட்டோருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 நாட்டிக்கல் மையில் தொலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, 3 விசைப்படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களை கொண்டு நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், நாகை மீனவர்களின் படகு என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களையும் திருடி சென்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த தங்கதுரை உள்ளிட்டோர் செருதூர் மீன்பிடி இறங்குதளம் வந்தடைந்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக இன்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.