2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கியிருக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவர். இதனால் இந்தக் காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு (2025) ஜன.13ம் தேதி போகிப் பண்டிக்கை, ஜன.14 தைப்பொங்கல், ஜன.15ம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் ஜன.16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஜன.10 முதல் ஜன.13ம் தேதி வரை 4 நாட்களுக்கு மொத்தமாக 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “பொங்கல் பண்டிகையை ஒட்டி 10ம் தேதியில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 10 ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 13ஆம் தேதி திங்கள்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. 10ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14 ஆயிரத்து 104 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 904 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
இதே போல் பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்காக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,790 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 6,926 பேருந்துகள் என மொத்தம் 22,676பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
பேருந்துகளை முன்பதிவு செய்து கொள்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏழு முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் இரண்டு முன்பதிவு மையங்களும் என 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் www.tnstc.in இணையதளம் வாயிலாகவும் , tnstc app வாயிலாகவும் பேருந்துகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.” என்று தெரிவித்தார்.