தேனி மாவட்டம் கம்பம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள கூடலூர் நகர் ஆசாரிமார் தெருவில் வசிப்பவர் லிங்கேஷ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சேவாக் (வயது 23), சஞ்சய் (வயது 22). நண்பர்களான இவர்கள் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மது அருந்தியுள்ளனர். பின்னர் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் கம்பம் – கூடலூர் சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது, லிங்கேஷ் வாகனத்தின் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லிங்கேஷ், சேவாக் மற்றும் சஞ்சய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மற்றொரு வாகனத்தில வந்த மோனிஷ் (வயது 22), கேசவன் (வயது 22) ஆகியோர் பலத்த காயத்துடன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் போலிசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி அன்று விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.