திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மகளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பல்லடம் காவல்துறையினர் கணபதிபாளையம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்திவரும் பாக்கியராஜ் என்பவர் கடையில் விற்பனைக்காக குட்கா புகையிலை பொருட்களை பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கடை மற்றும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாக்கியராஜை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், கர்நாடகாவில் இருந்து குட்காவை வாங்கி வந்து பல்லடம் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை தேடி பல்லடம் போலிசார் தேடி வருகின்றனர்.