சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 22 விமானங்கள் தாமதமாக புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காராணமாக கடந்த 2 நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களாக விடிய விடிய மழை பெய்து வண்ணம் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், பணிக்குச் செல்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் மழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 22 விமானங்கள் காலதாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 12 சர்வதேச விமானங்களும், 10 உள்நாட்டு விமானங்களும் அடங்கும். இந்த விமானங்க்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிங்கப்பூர், இலங்கை, குவைத், பஹ்ரைன், துபாய், சார்ஜா, தோஹா, அமீபா, அபுதாபி, மஸ்கட், லண்டன் உள்ளிட்ட 12 சர்வதேச விமானங்களும், அதேபோல் உள்நாட்டு விமானங்களான திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் உள்ளிட்ட 10 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இந்த தாமதத்திற்கு மிக முக்கிய காரணம் மழை கருதப்படுகிறது. மழையால் பயணிகளின் மற்றும் விமான பணியாளர்கள் தாமதமாக வருவவதாகவும், இதனால் விமானங்களின் புறப்பாடு நேரம் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் இன்று காலை 9:15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வர வேண்டிய இந்திய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உள்ளிட்ட இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.