கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கச்சத்தீவு, ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம். கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் புனித அந்தோணியாருக்கு வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம்.
1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை 08.07.1974 அன்று இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எழுதிக் கொடுத்தார். இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனிதஅந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர்கள். கடந்த காலங்களில் கொரனோ நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதித்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் மாதம் 3மற்றும் 4ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவில் தமிழகத்திலிருந்து 5 ஆயிரம் பக்தர்களும், இலங்கையிலிருந்து 10 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர். திருவிழாக்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை சுகாதாரத்துறையினர், கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், மற்றும் இந்தியாவிற்கான இலங்கை தூதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கான முழு ஏற்பாடுகளை இலங்கை யாழ்பாணம் மாவட்டம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் செய்யபடஉள்ளது.
