ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி
இரவு பணியில் இருந்த அரசு பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக பொறுப்பாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் திருப்பூண்டி சிந்தாமணி தெருவை சேர்ந்த சுப்ரமணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அதேபகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் என்பவர் திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 12 மணிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த மருத்துவர் ஜன்னத் மற்றும் செவிலியர்கள் சுப்ரமணியை பரிசோதித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை கேட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் மேல் சிகிச்சைக்கு அனுப்பாமல் இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும் என தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள் என தரம் குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். பாஜக நிர்வாகி இரவு நேரத்தில் இஸ்லாமிய பெண் அரசு மருத்துவரிடம் அத்துமீறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைஅறிந்த உள்ளூர் பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணி – தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை திருப்பூண்டி பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட், விசிக, மமக, மஜக, உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இரவு பணியில் இருந்த அரசு பெண் மருத்துவரை #ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட #பாஜக பொறுப்பாளரின் வைரல் வீடியோ….
****************நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜன்னத் என்பவரை பாஜக நிர்வாகி புவனேஷ்ராம்
ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள்… pic.twitter.com/MuTiTfVxIE
— RAMJI (@RAMJIupdates) May 26, 2023
அரசு மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் மீது அரசுமருத்துவரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மத உணர்ச்சியை தூண்டுவது, பெண் மருத்துவர் மற்றும்செவிலியர்களை அனுமதியில்லாமல் வீடியோ எடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கீழையூர் காவல் நிலையத்தில்வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.