உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேரத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று இரவு நீலகிரி மாவட்டம் மசினகுடியிலிருந்து உதகை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர். மலைப் பாதையின் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது காரின் முன்பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை உடனடியாக கவனித்த ஓட்டுநர் மற்றும் பயணிகள், விரைந்து செயல்பட்டு காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவி, கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சரியான நேரத்தில் பயணிகள் வெளியேறியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


