சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீயில், சிக்கி 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.


நேற்று இரவு கோவையிலிருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது . இதில் ஓட்டுனர் ராஜன் (35) உட்பட 44 பயணிகள் இருந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேட்டூர்- தருமபுரி சாலையில் புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பின்புறத்தில் திடீரென புகை கிளம்பியுள்ளது.
இதனை கவனித்த பயணிகள் ஓட்டுனரிடம் கூறியதும், ஓட்டுனர் உடனடியாக பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினார். அப்போது திடீரென தீ பேருந்து முழுவதும் பரவியதால் , பயந்துப் போன பயணிகள் முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். சிலர் அலறிக்கொண்டு ஜன்னல் வழியாக குதித்தனர். சிலர் தங்களது உடைமைகளை விட்டு விட்டு வெளியே வந்தனர் . அப்போது தீ , பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 30 நிமிட நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 11 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பயணிகள் சிலர் கொண்டு வந்த லேப்டாப் மற்றும் உடைமைகள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்துள்ளன.
