
ஆரூத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பா.ஜ.க. நிர்வாகி ஹரீஷ், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, ரூசோ உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கி நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அனைவரையும் சரிக் கட்டி விடுவதாகக் கூறி ரூசோ மோசடி செய்துள்ளதாகவும், அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு என்றும் வாதிட்டார்.
விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத வெற்று அறிக்கை – சசிகலா விமர்சனம்
அவர் ஜாமீனில் இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும், பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகாரளிப்பதை தடுக்க வாய்ப்புள்ளதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.
ரூசோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, மூன்று நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டார். சரணடையவில்லை என்றால் ரூசோவை கைது செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.