தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்
விஷச்சாராய உயிரிழப்பு, சட்டம், ஒழுங்கு விவகாரத்தில், தமிழ்நாடு அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ராஜன்செல்லப்பா தலைமையில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒசூர் மாநகராட்சி, ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுகவின் துணை பொது செயலாளர் K.P.முனுசாமி, கழக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கள்ளச்சார உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் முழுக்கமிட்டனர் தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவற்றில் கவனம் செலுத்தி கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலமையில் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை வழிப்பறி போதை பொருட்கள் புழக்கம், ஊழல் முறைகேடுகளை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை பதவி விலக வலியுறுத்தி முழக்கமிட்டபடி அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு அதிமுக சார்பில் திமுக அரசு கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் நாமக்கல்லில் பூங்கா சாலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.