புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள் 50 அடி மற்றும் 55 அடி கட் அவுட் நகரப் பகுதியில் வைத்து உள்ளனர். இதற்கு பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்தனர்.


தமிழ்த் திரையுலகில் நாயகர்கள் இடையே போட்டி இயல்பானது. அக்காலத்தில் தியாகராஜ பாகவதர் – கிட்டப்பா, எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்ற போட்டி தற்போது அஜித் – விஜய் என ரசிகர்கள் இடையே போட்டி உச்சத்தை அடைந்துள்ளது. உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் இரு தரப்புக்கும் இடையே பரபரப்பு பற்றிக்கொள்ளும். பல ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் வெளியாகிறது. புதுச்சேரி நகர மற்றும் கிராமங்களில் உள்ள 16 திரையரங்குகளிலும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. இதனை ஒட்டி நகரம் மற்றும் கிராமங்கள் முழுவதும் அஜித் – விஜய் பேனர்களை ரசிகர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.
நகரின் முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் இரு நடிகர்களின் கட் அவுட் – பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தரப்பும் தங்கள் விருப்ப நாயகர்களை உயர்த்தி பிடிக்கும் வாசகங்கள் இடம் பெறும் வகையில் பேனர்கள் வைத்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக அஜித் ரசிகர்கள் 50 அடி மற்றும் 55 அடி கட் அவுட் நகரப் பகுதியில் வைத்து அசத்தியுள்ளனர். மேலும் கட்டவுட் மீது ஏறி பாலபிஷேகம் செய்தனர்.
