பாமகவினரையும் பொதுமக்களையும் மனு கொடுப்பதற்கு கூட அனுமதிக்காமல் கைது செய்தது அடக்குமுறை என அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.


இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், “கடலூர் மாவட்டம் பூதங்குடியில் என்.எல்.சி சுரங்கத்திற்கு வேளாண் விளைநிலங்களை கையப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ரகசிய கலந்தாய்வு கூட்டத்தில் மனுகொடுப்பதற்காக சென்ற பாமகவினர் தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. என்.எல்.சி சுரங்கத்திற்கு நிலம் எடுக்க உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்வது அரசின் கடமை. ஆனால் பாமகவினரையும் பொதுமக்களையும் மனு கொடுப்பதற்கு கூட அனுமதிக்காமல் கைது செய்தது அடக்குமுறை ஆகும்.
அடக்குமுறையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி நிலங்களை பறிக்கலாம் என்று என்.எல்.சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் நினைத்தால், அதை மக்கள் முறியடிப்பார்கள். இதை உணர்ந்து என்.எல்.சிக்கான நிலம் எடுப்புப்பணிகளை அரசு கைவிடவேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
