பாஜக தொண்டர் ஜடேஜாவால்தான் சிஎஸ்கே வெற்றி – அண்ணாமலை
பாஜக காரியகர்த்தா ஜடேஜாதான் சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி குஜராத்தின் அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.
இதன் பின் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டு, போட்டியை கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தியதால் போட்டியின் ஓவர் 15ஆக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கும் 171ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து களம் இறங்கிய சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டியதால் ரன்களை சராசரியாக குவித்து வந்தது.இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி இரண்டு பந்துகளில் அதிரடியாக ஆடிய ஜடேஜா சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த இறுதிப் போட்டியை காண சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டு ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்பட்டது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டியை கண்டு களித்தனர்.
சென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பேசிய ரசிகர்கள் கடைசி ஓவர் வரை ஆட்டத்தின் விறுவிறுப்பு குறையாமல் போட்டியை கண்டு ரசித்ததாகவும் சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிஎஸ்கே வெற்றியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பாஜக காரியகர்த்தா ஜடேஜாதான் சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா குஜராத் ஜாம்நகர் வடக்கு பாஜக எம்.எல்.ஏ ஆவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.