அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு இன்று தமிழக அரசு சார்பில் ரூ 50,000 சன்மானம் வழங்கப்பட்டது
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்கள் கடந்த 10ஆம் தேதி அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை உயிரினமான சுமார் 800 கிலோ எடை கொண்ட 8 அடி நீளமும், 5 அடி அகலமும் கொண்ட கடலில் வாழக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த கடல் பசு ஒன்று சிக்கியது. உடனே அந்த

கடல் பசுவை கண்ட மீனவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்களுக்கு வனத்துறையினர் ஆலோசனையும், அறிவுரையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் மீண்டும் நல்ல நிலையில் கடலுக்குள் கடல் பசுவை விட்டனர். அப்போது அந்த
கடல் பசு துள்ளிக்குதித்து கடலுக்குள் சென்றது. அதனைத் தொடர்ந்து கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு தனித்தனியாக சந்தன மாலை அணிவித்து கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் கடலுக்குள்விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா அதிராம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு நல்ல நிலையில் கடல் பசுவை கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 50,000 சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.