உதயநிதியின் பேச்சை கேட்டு இளைஞர்கள் பலர் பாஜக பக்கம் திரும்புகின்றனர்- அண்ணாமலை
இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒரே வார்த்தைதான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களும் சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் பெற உழைத்த தியாகி இமானுவேல் சேகரனின் 66-ஆவது நினைவுதினம் மற்றும் குருபூஜை தினமான இன்று தமிழக பாஜக சார்பாக பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் அவர்களது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இந்த புண்ணிய மண்ணில் அரசியல் பேசினால் தப்பா போயிடும். அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு. அப்படி வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள். அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள். உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மிகவும் அதிகம். குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது. அமைச்சர் உதயநிதியின் பேச்சை கேட்டு இளைஞர்கள் பலர் பாஜக பக்கம் திரும்புகின்றனர்.
இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒரே வார்த்தைதான். அரசியலமைப்பு சட்டத்திலேயே உள்ளது. பாரதம் என்ற வார்த்தை நமது பண்பாட்டை மிக ஆழமாக வெளிப்படுத்துகிறது. இந்தியாவிற்கு புதிதாக எந்த பெயரும் வைக்கவில்லை. அரசியல் சட்டத்தில் உள்ளதுதான் கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்புன்கூர் என்ற ஊரில் உள்ள கோயிலில் நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சிவனை பார்க்க அனுமதி இல்லை என்று சொன்னதால் நந்தியை சற்று விலகச்சொல்லி சிவன் காட்சியளித்த தர்மம் நம்முடைய சனாதனம்” என்றார்.