திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள், பூச்சிகள் நெளியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் மத்திய பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தில் நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய பல்கலைக் கழக விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வரும் உணவில் பூச்சிகள், புழுக்கள் கலந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் சார்பில் மத்திய பல்கலைக் கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழக விடுதியில் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவிலும் புழுக்கள் பூச்சிகள் இருந்துள்ளது. இதனை மாணவர்கள் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் உணவில் புழுக்கள் நெளியும் காட்சிகளும், பூச்சிகள் இறந்த நிலையில் கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து பேசிய பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமற்ற முறையிலும், புழுக்கள் மற்றும் பூச்சிகள் கலந்து வருவதாகவும், இது தொடர்பாக மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.