ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி திருநகர் காலணியில் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் பரப்புரை பயண தொடக்கவிழா மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும் இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.


கூட்டத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை பயணம் நிகழ்ச்சி தமிழர்களுக்கும் மிகவும் தேவையான நிகழ்ச்சி, திராவிட மாடல் பரப்பு பயணம் மிகவும் முக்கியமானது என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஏற்கனவே பேசும்போது இந்த ஆட்சி என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் ஆட்சி அல்ல இது ஒரு இனத்தின் ஆட்சி என்று சொன்னார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது.
இந்த நாட்டில் நமக்குத் தேவையான விஷயங்கள் என்பது ஜாதிகள் இருக்ககூடாது, மதச்சார்பின்மை இருக்க வேண்டும், மதங்களின் பெயரால் ஜாதிகளின் பெயரால் மக்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை வளர்த்து விடக்கூடாது என்ற கட்டாயத்தில் நாட்டின் நிலைமை இருக்கிறது. திருமகன் ஈவேரா இல்லை. ஆனால் அவர் எனக்கே தெரியாத பல விஷயங்களை ஈரோட்டிலே செய்துள்ளார், ஈரோடு மக்களோடு ஒருங்கிணைந்து கலந்து இருக்கிறார் என்பதை நான் புரிந்துள்ளேன், நல்ல பல காரியங்களை செய்ததோடு ஒரு சுயமரியாதை காரனாக பகுத்தறிவு கொண்டவராக அவர் வாழ்ந்திருக்கிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். திருமகன் ஈவேரா ஈரோடு மக்களுக்கு நல்ல பல காரியங்களை செய்துள்ளார். அது மக்களுக்கு தெரியும். திருமகன் ஈவேரா விட்டுச்சென்ற பணியை ஈரோட்டில் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கைச்சின்னத்தில் நிற்கின்றேன்.
என்னைப் பொறுத்த வரையில் அரசியல் வாழ்வில் சமூகத்தில் பகுத்தறிவில் தமிழக வரலாற்றில் எப்படி ஈரோடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருக்கிறதோ அந்த நகரத்தில் மக்களுக்கு பணியாற்றி குறைகளை போக்கி நானும் என்னுடைய ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து இந்த கட்டத்தை அடைந்திருக்கிறேன். இந்த நேரத்தில் இந்த மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். மேலும் இந்த தேர்தலில் போட்டியிடுவது ஈரோடு மாநகரத்தின் வளர்ச்சிக்காக போட்டியிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த நகரத்தை பொறுத்தவரை நான் தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஈரோடு நகருக்கு அரசியலுக்கு அப்பார்பட்டு பெரியார் நகர்மன்ற தலைவராக இருந்து பல காரியங்களை செய்துள்ளார். இந்த நகரத்தில் குழாய்களில் தண்ணீர் வருகிறது என்று சொன்னால் அதை செய்து கொடுத்தவர் தந்தை பெரியார் என்பதை யாரும் மறந்து விட முடியாது. இன்றைக்கும் வஉசி பூங்காவில் நீர் தொட்டி நூறாண்டுகளாக பழுதாகாமல் இருக்கிறது. ஈரோடு ஜனத்தொகையில் 75 சதவீத மக்களுக்கு அது குடிநீர் ஆதாரமாக பயன்படுகிறது என்றால் அதை செய்தவர் பெரியார் என்று சொல்ல நான் உண்மையில் பெருமைப்படுகிறேன்.
ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துச்சாமியுடன் இணைந்து எனது மகன் திருமகன் ஈவேரா ஒன்றை ஆண்டு காலத்தில் நல்ல பல காரியங்களை இந்த மாநகருக்கு செய்துள்ளார். இந்த மாநகருக்கு புதிதாக 800 விளக்குகள், பல சாக்கடை பழுது பார்க்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கிறது. இன்னும் சில இடங்களில் வேலைகள் பாக்கி இருக்கிறது என பல விசயங்களை சொல்லலாம். என்னைப் பொறுத்த வரையில் அந்த வழியில் வந்த நான் கடைசி வாழ்க்கை கட்டத்தில் இருக்கிறேன் என்று சொன்னால் மிகை ஆகாது, இந்த நேரத்தில் இந்த ஊருக்கு மாற்ற வேண்டிய கடமைகள் எனக்கு உண்டு அதை செய்து முடிப்பதற்கு ஈரோடு பெருமக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று தெரிவித்தார்.
