நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாக ரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
dh
திரைப்பட நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணம் ஆகி 18 ஆண்டுகளுக்கு பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, முதலில் 6 மாத காலம் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தார். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இருவரும் 2 விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.
மீண்டும் கடந்த 21-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது பரஸ்பரம் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் கையொப்பம் இட்டனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி சுபாதேவி, தனுஷ் – ஐஸ்வர்யா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.