கடந்த டிசம்பர் 10-ம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பயணித்தனர்.


அப்போது விமான பயணத்தில் திடீரென அவசரகால கதவை திறந்ததாகவும், இதனையடுத்து விமானத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, பின்னர் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த சம்பவத்திற்காக தேஜஸ்வி மன்னிப்பு கேட்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் இன்று இண்டிகோ விமானம் மூலமாக கோவை பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கோவைக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் செய்கிறேன். எனக்கு அவசர கால கதவு அருகே இருக்கக்கூடிய இருக்கை கிடைத்துள்ளது. ஆனால் நான் அவசர வழியை திறக்கப் போவதில்லை. ஏனென்றால் நான் அதை திறந்தால் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டி வரும். இதை திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து. அதனால் அறிவுள்ளவர்கள் அந்த காரியத்தை செய்ய மாட்டார்கள்.
To all flyers, in the interest of passenger safety, please don't fool around with the #EmergencyExit!
பயணிகளின் அன்பான "அவசர" கவனத்திற்கு!
@IndiGo6E @DGCAIndia #ResponsibleMP #don @Tejasvi_Surya pic.twitter.com/PYqjeCfyt8
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) January 21, 2023
அப்படி செய்தால் எனக்கு மட்டுமின்றி அனைத்து பயணிகளுக்கும் இரண்டு மணி நேரம் வீணாகும். அனைவரும் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன்”, என குறிப்பிட்டுள்ளார். விமான பயணத்தின் போது அவசர கால கதவை திறந்த விவகாரம் பெரும் விவாதத்தை எழுப்பிய நிலையில், தயாநிதிமாறனின் இந்த வீடியோ அதனை சாடுவதாக உள்ளது.
