திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 5 மாத கர்ப்பிணி மனைவியை ஓடும் பேருந்தில் இருந்து கணவன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியை சேர்ந்த வெள்ளைமெய்யன் மகன் பாண்டியன் என்பவருக்கும், கல்வேலிப்பட்டியை சேர்ந்த வளர்மதி(18) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்தது. வளர்மதி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வளர்மதியின் தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக இருவரும் அரசு பேருந்தில் கல்வேலிப்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது கணவன் பாண்டியன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வளர்மதி இறங்க முற்பட்டுள்ளனர்.
அப்போது பாண்டியன் வளர்மதியின் வயிற்றில் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த வளர்மதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் உடனடியாக சாணார்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த வளர்மதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.