அண்ணாமலையின் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துகள்- விஜயகாந்த்
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் தொடக்க விழாவில் தேமுதிக பங்கேற்பதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்துக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேபோல், பா.ஜ.க. தலைமையும் ஆட்சியைத் தக்க வைக்கும் தலைமையில், கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக மக்களிடம் ஆதரவைப் பெறும் வகையில், ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று ராமேஸ்வரத்தில் இருந்து பாத யாத்திரையைத் தொடங்குகிறார். இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் திரு.கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார். மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#EnMannEnMakkal நடைபயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் அன்பு அண்ணன் கேப்டன் @iVijayakant அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். https://t.co/lEtibR4VUb
— K.Annamalai (@annamalai_k) July 28, 2023
இதற்கு நன்றி தெரிவித்து அண்ணாமலை, “#EnMannEnMakkal நடைபயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் அன்பு அண்ணன் கேப்டன் விஜயகாந்த்துக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.