எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் முதலமைச்சர் செயல்படுகிறார்: உதயநிதி ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளதால் தகுதி உள்ள பயனாளிகள் யாரையும் விட்டுவிடாமல் , பயனாளிகளிடம் மரியாதையுடன் அரசு அலுவலர்கள் செயலாற்ற வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட அனைத்து அரசு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டம் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு சில துறைகளில் தொய்வு உள்ளது, கல்விதுறையில் பின் தங்கி உள்ளது. அதனால் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து கல்வியில் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவேண்டும் என்றார்.
தமிழக முதலமைச்சர் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறார். தொய்வு ஏற்படுகின்ற போது நடவடிக்கை மேற்கொள்கிறார் . அதனால் அதிகாரிகள் இதை மனதில் வைத்து செயலாற்ற வேண்டும் என்றார். கடந்த இரண்டாண்டு ஆட்சியில் செயல்படுத்தும் புதுமைபெண் திட்டம், இலவச பேருந்து பயண திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழக அரசு செயல்பட்டுத்த உள்ள புரட்சிகரமான திட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும் , இத்திட்டத்திற்கு மக்களிடையே நல்லவரவேற்பு மற்றும் எதிர் பார்ப்பு உள்ளதால் பயனாளிகள் ஒருவரையும் விட்டுவிடாமல், பயனாளிகளை மரியாதையோடு நடத்தவேண்டும் என்றார்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார். அரசு திட்டங்களை அறிவித்தாலும், நிதி ஒதுக்கினாலூம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது அதிகாரிகள் தான் அதனால் கடைகோடி மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைய அதிகாரிகள் அரசுக்கு உதவியாக செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.