ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.


வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் போட்டிபோட்டு அறிவித்துள்ளன. வேட்பாளரை விரைவில் அறிவிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிக்குழுவை அமைத்து அவர்களுடன் நேற்று 7 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்கள் தரப்பிற்கு ஒதுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் ஈ.பி்எஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்
எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது” என்று எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். ஜனவரி 30-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் முறையிடுமாறு நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
