மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பலியான மாடுபிடி வீரர் அரவிந்தராஜன் குடும்பத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.


மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் ராஜன், கட்டிட தொழிலாளியான இவர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்றார். விழாவில் தொடர்ந்து பல்வேறு சுற்றுகளில் ஒன்பது ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிப் பிடித்த அரவிந்த் ராஜன் சிறந்த மாடுபிடி வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை வகித்து வந்தார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டின் போது அவர் அடக்க முயன்ற காளை அவரது வயிற்றில் குத்தியதில் குடல் சரிந்து நிலை குலைந்து கீழே விழுந்தார். அவரை உடனடியாக மீட்ட மீட்பு குழுவினர் முதல் உதவி சிகிச்சைக்காக பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற அரவிந்தராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சென்ற சிகிச்சை பலனின்றி அரவிந்தராஜன் பரிதாபமாக உயரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த அரவிந்தராஜன் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை மாடுபிடி வீரர் அரவிந்தராஜன் வீட்டிற்கு நேரில் சென்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து மூன்று லட்சத்திற்கான காசோலையும், தனது சொந்த நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய்க்கான ரொக்க பணம் என ரூ.5 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
