Homeசெய்திகள்தமிழ்நாடுபாரம்பரிய முறையில் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

பாரம்பரிய முறையில் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் டிராவல் இந்தியா என்ற அமைப்பு மூலம் ஆண்டுதோறும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆட்டோ ரிக்ஷா மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டு வருகின்றனர். அத்துடன், ஏழை பள்ளி மாணவர்களுக்கு கட்டிடம் மற்றும் கல்வி உதவி தொகைகளை வழங்கி உதவி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்னையில் பயணத்தை தொடங்கி புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர்.

பயணத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள பிரம்ம ஜோதி என்ற பண்ணை தோட்டத்திற்கு இன்று சுற்றலா பயணிகள் வருகை தந்தனர்.‌ இந்த ஆட்டோ ரிக்க்ஷா குழுவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 16 ஆண்களும் 5 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். பண்னை தோட்டத்திற்கு வருகை தந்த வெளிநாட்டினருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்களும், பெண்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலை அணிந்துகொண்டு, மண் பானையில் பொங்கல் வைத்தனர்.

பனை ஓலை வைத்து, பச்சரிசி, வெல்லம், நெய்யிட்டு சர்க்கரை பொங்கலை வைத்தனர். பொங்கல் பொங்கி வரும்போது  ஆண்களும், பெண்களும் பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக குலைவையிட்டனர். பின்னர் அவர்கள் தயாரித்த பொங்கலை வரிசையாக வைக்கப்பட்டு, சிறந்த பொங்கல் தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி தயார் செய்த பொங்கல் சிறந்த பொங்கலாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வாழைக் குலை பரிசளிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை கொண்டாடியது தங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்ததாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ஆட்டோ மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்திய மக்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் இந்த சுற்றுப் பயணத்தில் கிடைக்கும் ஒரு தொகை, ஏழை குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

MUST READ