
தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டை முன்னிட்டு, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் பேரணி நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடலுக்கு இறுதிச் சடங்கு!
தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் டிசம்பர் 17- ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. மாநாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி முதல் சேலம் வரையிலான இருசக்கர வாகன பரப்புரைப் பேரணியை தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இருந்து 188 இருசக்கர வாகனங்களுடன் தொடங்கிய பேரணி, நான்கு மண்டலமாகப் பிரிந்து 234 தொகுதி வழியாக சேலம் சென்றடைய உள்ளது.
பேரணி தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்!
மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்..
13 நாட்கள் – 234 தொகுதிகள் – 504 பிரச்சார மையங்கள்- 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.
இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி – மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.