தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய 30 வயது பெண் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்துச்சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதில் அந்தப் பெண் பயணியின் பையில் இருந்த பார்சலில் உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை வெளிநாட்டினர் மற்றும் செல்வந்தவர்கள் அதிகளவில் பயன்படுத்துவர். இதனை அடுத்து, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கஞ்சா கடத்தல் தொடர்பாக இளம்பெண்ணை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட இந்த கஞ்சா போதை பொருளை, தாய்லாந்தில் இருந்த பெண் பயணியிடம் ஒப்படைக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் இந்த பெண், போதை கடத்தும் கும்பலிடம், கூலிக்காக வேலை செய்பவர் என்றும் தெரிய வந்தது. இதனிடையே, அண்மையில் சென்னையில் போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட திரைப்பட துணை நடிகைக்கும், இவருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும், அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.