சட்லஜ் நதிக்கரையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க கடற்படை உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவரை தேடும் பணியில் இமாச்சலப்பிரதேசம் மாநில காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, கஷாங் நாளா பகுதியில் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரில் பயணித்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வெற்றி துரைசாமி காணாமல் போன நிலையில், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், ஆற்றில் இறங்கி தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக, தமிழக காவல்துறையினருக்கு இமாச்சலப்பிரதேசத்தின் காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சைதை துரைசாமியின் குடும்பத்தினர் விமானம் மூலம் இமாச்சலப்பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர். கார் விபத்தில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என அவரது தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. சட்லஜ் நதிக்கரையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க கடற்படை உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது. சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.