தேர்தல் பத்திர திட்டம் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிதி பெற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது முற்றிலும் தவறானது எனவும், அந்த ஊடகங்கள் மறுப்பு செய்தி வெளியிடாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம் ஒரு பைசா கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதி பெறவில்லை. அதற்கான சிறப்பு வங்கி கணக்கையும் துவக்கவில்லை. அந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று அந்த திட்டத்தை ரத்து செய்ய வைத்திருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்நிலையில், தேர்தல் பத்திர திட்டம் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிதி பெற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது மட்டுமின்றி உண்மைக்கும் புறம்பானது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திட்டமிட்டு களங்கப்படுத்துவதற்கான உள்நோக்கம் கொண்டதாகும். எனவே, தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மறுப்பு செய்தி / திருத்தம் வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது; இல்லையேல் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.