திருவள்ளுர் கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்திற்குள்ளானது. ரயில்கள் மோதிக்கண்ட வேகத்தில் சில ஏசி பெட்டிகள் தடம்புரண்டு தீப்பிடித்து எரிந்தன.
ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், மற்றும் கவரைப்பேட்டை பகுதிபொதுக்கள் சம்பவ இடத்திக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 3 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சிக்கிய 1300க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களை அமைச்சர் ச.மு.நாசர். திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு அமைச்சர் நாசர் உணவுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, அவர்கள் சிறப்பு பேருந்துகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சொந்த ஊர்செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பயணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து
ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட பயணிகளை பிரத்யேக வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பயணம் செய்ய முடியாதவர்களை அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைத்து தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெ ரிவித்தார்.