கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டோர்கள் தரப்பில் ஜித்தின்ஜாய் மட்டும் ஆஜரானார்.
சிபிசிஐடி போலிசார் தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் டிஎஸ்பிகள் சந்திரசேகர் மற்றும் அண்ணாதுரை ஆகியோர்களும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணையின் போது எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எடப்பாடி பழனிச்சாமி,சசிகலா,இளவரசி,சுதாகரன்,முரளி ரம்பா உள்ளிட்ட 8 பேரிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளதால் அவர்களுக்கு சம்மன் அளித்து சிபிசிஐடி போலிசார் விசாரிக்க வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தற்போது புலன் விசாரணை நடத்தி வருவதாகவும் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டு பிறகு அரசு தரப்பு சாட்சிகள் முதலில் விசாரிக்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும் என்றும் அப்போது தேவைபாட்டால் அவர்களிடம் விசாணை நடத்தபடும் என்றும் தற்போது வழக்கு புலன் விசாரணை கட்டத்தில் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோரிடம் விசாரிக்க அவசியம் இல்லை என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.