
நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பாக தனிச்சட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள நிலப்பிரச்சனை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை இன்று (மே 04) விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, “ஆந்திரா மாநிலத்தில் இருப்பது போன்று தமிழகத்திலும் நில அபகரிப்பு விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும். வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இரண்டு நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நிலப்பிரச்சனைகளில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது” என்று தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆலோசனை செய்து, நிலப்பிரச்சனைகள் தொடர்பாக தனிச்சட்டம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.