நாட்டளவில் நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் ‘சுய கணக்கெடுப்பு’ (Self Enumeration) குறித்துப் பிரபல திரையுலக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
“அச்சப்படத் தேவையில்லை”: எம்.எஸ்.பாஸ்கர் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஆன்லைன் வழியிலான சுய கணக்கெடுப்பு குறித்துப் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், பொதுமக்கள் எவ்விதத் தயக்கமும் இன்றித் துல்லியமான தகவல்களை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “வீட்டில் எவ்வளவு நகை இருக்கிறது, எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று யாரும் வந்து உங்களிடம் கேட்கப் போவதில்லை. உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்ற அடிப்படை விபரங்களை மட்டுமே கேட்கப் போகிறார்கள். எனவே, எதற்கும் தயங்காமல் உண்மையைச் சொல்வோம், உரக்கச் சொல்வோம்!” என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளாா்.
டிஜிட்டல் சுய கணக்கெடுப்பின் முக்கியத்துவம்
தற்போது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைச் சரியாகத் திட்டமிடுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இதில் பொதுமக்கள் தங்களின் குடும்ப விவரங்களை இணையவழியில் தாங்களாகவே பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீடுகளுக்கு நேரில் வரும் கணக்கெடுப்பாளர்களிடம் சரியான தகவல்களை வழங்குவதுடன், ஆன்லைன் வசதியை விரும்பினால் சுய கணக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தித் தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் இந்த இயல்பான மற்றும் தெளிவான விழிப்புணர்வு பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
