தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் இயல்பைக் காட்டிலும் இரண்டு அடியில் இருந்து மூன்று அடி உயரத்திற்கு மேல் எழும்புகிறது.

சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 08 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டு உள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 530 கி.மீ. மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் சென்னையில் வழக்கத்திற்கும் மாறாக புயல் காரணமாக கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. வழக்கமாக காலையில் நடை பயிற்சி மேற்கொள்வோர் இந்த கடல் சீற்றத்தினை ரசித்து சென்றனர். மேலும் வழக்கமான நாட்களை விட அதிக உயரத்தில் அலை எழுவதாக அவர்கள் கூறினர்.