இந்தியாவிலேயே உயர்கல்வி துறையில் தமிழகம் 53 சதவீதத்தை பெற்று முதலிடத்தில் இருப்பதற்கு, திராவிட மாடல் தான் காரணம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், 1428 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “அரசியலுக்காக திராவிட மாடல் அல்ல, சமூக நீதிக்காக தான் திராவிட மாடல். தமிழகத்தில் எந்த பள்ளிகளை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் இருக்கக் காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கி திராவிட மாடலே. அயலி வெப் சீரிஸ் பார்த்தேன். அதில் வருவதுபோல பெண்கள் பருவமடைந்தால் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என உங்கள் பாட்டில்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் இப்போது அவர்கள்தான் உங்களை படிக்க ஊக்குவிக்கின்றனர். அதுதான் திராவிட மாடல். அனைத்து பிரிவு மாணவிகளும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வந்தது தான் புதுமை பெண் திட்டம். உலகத்திலேயே முதன்முதலாக இத்திட்டத்தை கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் மு.ஸ்டாலின். பாரதி மகளிர் கல்லூரி கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்பை தரம் உயர்த்துவதற்கு தமிழக முதல்வர் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே உயர்கல்வித்துறையில் தமிழகம் 53% பெற்று முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் தான். இருமொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ், ஆங்கிலம்” எனக் கூறினார்.
