மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி அதிரடி ஆய்வு- வார்டன் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியின் வார்டனை பணி இடை நீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
கிருஷ்ணகிரியில் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த மாணவர்களுடைய வருகை பதிவேடு, மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு வகைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போது, கோப்புகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், விடுதி காப்பாளர் முருகனை உடனடியாக பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 500 மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதன்பின் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளியில் ரூ.26.82 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் குளிர் பதனக்கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் கட்டுமான பணிகளையும் அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.