நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு அருகே கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் அதிகாலை 2 மணியளவில் பயங்கரமான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சூரல் மலை பகுதியில் பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 500 குடும்பங்கள் அங்கு சிக்கி அதில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கேரளாவில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது; நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக அறிந்தேன். வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தமிழ்நாட்டில் இருந்து மீட்புப்படையை அனுப்பி உதவ தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.