வருகிற 2024 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வருகிறது 2024 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும். பத்தாண்டு கால சந்திரசேகர் ராவ் ஆட்சியில், மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளதால், அதன் பிரதிபலிப்பாக காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை அடையும். பல மாற்றங்கள் செய்து புதிய தலைவரை நியமித்து , அதற்கான பணிகளை துவங்கியுள்ளோம்.
வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநில பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணியுடன், திமுக உள்ளிட்ட மற்ற கட்சி கூட்டணியுடனும், மேலும் புதிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தும், காங்கிரஸ் கட்சி தனி தன்மையை இழக்காமல், மாநில தலைமையுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி புதிய பலத்துடன் களத்தில் இறங்கி வெற்றியை நோக்கி பயணம் செய்வோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.
