3 வது பெண் கலெக்டராக எம்.எஸ்.சங்கீதா இன்று பதவியேற்பு
தமிழக அரசு அண்மையில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பன்னிரெண்டு மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த அனீஷ் சேகர் இடமாற்றம் செய்யப்பட்டு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

வணிக வரித்துறை இணை கமிஷனராக இருந்த சங்கீதா மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோப்பில் கையெழுத்திட்டு கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம் பட்டியை சேர்ந்த சங்கீதா, தமிழக அரசின் குரூப் 1 அலுவலராக பணி நியமனம் பெற்று, 2016 -ம் ஆண்டு பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றார். அதன்பின் தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக எம்.எஸ்.சங்கீதா பொறுப்பேற்று உள்ளார்.

மதுரை மாவட்ட கலெக்டராக சந்திரலேகா 1984-85-ம் ஆண்டிலும், கிரிஜா வைத்தியநாதன் 1991-92-ம் ஆண்டிலும் பணிபுரிந்துள்ளனர். தற்போது மாவட்டத்தின் மூன்றாவது பெண் கலெக்டராக சங்கீதா பொறுப்பேற்று உள்ளார். முப்பது வருடங்களுக்கு பிறகு மதுரைக்கு பெண் ஆட்சியராக எம்.எஸ்.சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


