நெல்லை கவின்குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதேவேளையில் கவினின் காதலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கவின் மரணத்திற்கும், தனது பெற்றோருக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை கேடிசி நகர் பகுதியில் கடந்த ஜூலை 27ஆம் தேதி அன்று தூத்துக்குடி ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் (வயது 25) என்பவரை நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், என்ற வாலிபர், தனது அக்காவுடன் ஆன காதலை கைவிட வலியுறுத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார். இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஜூலை 28 இறந்த கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனை பிணவரையில் உடற்கூறுஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவினின் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் காவல்துறையின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கவினின் உறவினர்கள் இன்று 4-வது நாளாக உடலை வாங்க மறுப்பு தெரிவித்து சொந்த ஊரிலேயே இருக்கின்றனர். இதையடுத்து காவல்துறையினர் நீண்ட ஆலோசனைக்குப் பின் நேற்று சுர்ஜித்தின் தந்தையான காவல் உதவி சார்பு ஆய்வாளர் சரவணனை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது கவினின் காதலி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தானும் கவினும் சின்சியராக காதலித்தோம். தனது அப்பா அம்மாவிற்கு இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை தண்டிக்க வேண்டாம் என பல தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, கவின்குமார் ஆணவப் படுகொலை வழக்கை தமிழக அரசு, சிபி சிஐடியிடம் வழங்க முடிவு செய்து, அதற்கான ஆணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து நெல்லை பாளையங்கோட்டை காவல்துறையினர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட செல்போன், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம், சிசிடிவி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பல ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பெற்றுக்கொண்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.