அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. CEG (collage of engineering in guindy) டீன், உள் புகார் குழுவில் இருக்கும் உறுப்பினர், அகாடமிக் டைரக்டர் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழு ஹாஸ்டல் விதிகளில் மாற்றம் செய்ய உள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் இதற்கு முன்பு இரவு 8.30 மணி வரைக்கும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாலை 6.30 மணிக்கு மாணவர்கள் ஹாஸ்டலில் இருக்க வேண்டும் என்கின்ற வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாணவர்கள் விடுதிக்கு தாமதமாக வர நேரிட்டல் முன்கூட்டியே ஹாஸ்டல் வார்டனிடம் தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தகவல் அளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால் பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக செக்யூரிட்டிகள் அடையாள அட்டை கேட்டால் காண்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக மாணவர்கள், அலுவலர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.