அ.தி.மு.க கட்சி விதிகள் மாற்றத்தை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரியும், வேட்புமனுவில் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட கோரியும் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது, பொதுக்குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில் அனைத்து சரத்துக்கள் மற்றும் விவரங்களும் அடங்கி உள்ள நிலையில், இடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு என்பது விசாரணைக்கு உகந்ததில்லை, ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது, அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டனவா என்பது தெரியவரும். அதுவரை எடப்பாடிக்கு கட்சியின் அதிகாரத்தை உரிமை கோரமுடியாது,

மேலும் தற்போது எடப்பாடியால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்துவது ஆகும். மேலும் தற்போதைய கோரிக்கையை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எந்தவொரு முந்தைய வழக்கிலும் தேர்தல் ஆணையம் ஒரு பிரதியாக இல்லாத நிலையில் தற்போது எவ்வாறு அதனை ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என கோர முடியும் ? இந்த விவகாரம் நீதமன்றத்தில் இருப்பதால் உரிய சட்ட வழிமுறைபடிதான் நடக்க வேண்டும் என்பதை அறிந்தே தலைமை தேர்தல் ஆணையம் எடப்பாடி தரப்பு விடுத்த கோரிக்கைகளை ஏற்காமல் வைத்துள்ளது.

அதேபோல் அ.தி.மு.க.வை சட்டத்துக்கு புறம்பாக முறைகேடாக கைப்பற்றலாம் என்று இருந்த எடப்பாடிக்கு கடந்த 30-09-2022ல் உச்சநீதிமன்றம் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று பிறப்பித்த தடை உத்தரவு அவருக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. தன் மீது அவதூறுகளை தெரிவித்து எப்படியாவது உத்தரவை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். எனவே எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று ஓ.பி.எஸ் தனது பதில் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பழனிசாமியின் இடையீட்டு மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.
